மாநிலங்களவை இடத்தை பறிகொடுத்த காங்கிரஸ்...எம்எல்ஏ செய்த தவறால் பாஜக வெற்றி
வாக்குச்சீட்டில் 1 என எழுதுவதற்கு பதில் ஒன் என காங்கிரஸ் எம்எல்ஏ எழுதியிருந்தார். இதனால், இந்த வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அந்த எம்எல்ஏவை காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது.
அஸ்ஸாமில் மாநிலங்களவை இடத்தை பாஜகவிடம் காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. அந்த மாநிலத்தில் காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடத்தப்பட்டது. அதில், ஒரு இடத்தை பாஜக போட்டியின்று கைப்பற்றியது.
வாக்குச்சீட்டில் 1 என எழுதுவதற்கு பதில் ஒன் என காங்கிரஸ் எம்எல்ஏ எழுதியிருந்தார். இதனால், இந்த வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, அந்த எம்எல்ஏவை காங்கிரஸ் இடைநீக்கம் செய்தது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் நிறுத்திய வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
காங்கிரஸ் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சித்திக் அகமது இடைநீக்கம் செய்யப்பட்டதால், காங்கிரஸ் வேட்பாளர் ரிபுன் போரா வெற்றி வாய்ப்பை இழந்தார். "கட்சி கொறடாவின் உத்தரவை சித்திக் உள்நோக்கத்துடன் மீறியுள்ளார்" என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.
Advertisement
அஸ்ஸாமில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு வியாழக்கிழமை அன்று தேர்தல் நடத்தப்பட்டது. பாஜகவின் பபித்ரா மார்கெரிட்டா ஒரு இடத்தை போட்டியின்றி வென்றார். இரண்டாவது இடத்திற்கு எதிர்க்கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட ரிபுன் போராவுக்கும் பாஜகவின் ஆதரவின் பேரில் கூட்டணி கட்சி வேட்பாளரான ருங்வ்ரா நர்சரிக்கும் போட்டி நிலவியது.
இதையும் படிக்க | ரஷியாவின் தெற்கு குரில் தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம்
இதில், காங்கிரஸ் வேட்பாளருக்கு அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவு அளித்திருந்தது. வெற்றி பெறுவதற்கு 43 வாக்குகள் தேவைப்பட்டது. 126 இடங்கள் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவையில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 83 வாக்குகள் இருந்தன. முதல் இடத்தில் வெற்றிபெறுவதற்கு பாஜகவுக்கு போதுமான வாக்குகள் இருந்தாலும் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற மூன்று வாக்குகள் குறைவாக இருந்தன.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் வாக்கை வீணடித்ததால், எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை குறைந்தது.