ஐநா மூலம் கோவாக்சின் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருப்பதால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
எந்தவொரு ஐ.நா. அமைப்புகளுக்கும் மருந்து நிறுவனத்திலிருந்து கரோனா தடுப்பூசி அனுப்பப்படவில்லை என்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரத் பயோடெக் நிறுவனம் தற்போது கோவாக்ஸின் மருந்தை இந்தியாவுக்கும், ஒன்பது இதர நாடுகளுக்கும் மட்டுமே விநியோகித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐநா மூலம் கோவாக்சின் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு கடந்தவாரம் தெரிவித்திருந்தது. கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்துவரும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், வசதிகளை மேம்படுத்தவும் குறைபாடுகளை சரி செய்யவும் வலியுறுத்தியிருப்பதாகக் கூறப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "ஐநா அமைப்புகள் மூலம் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசியை வாங்கிய நாடுகள் தக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.