புதுதில்லி: சில உயிர் காக்கும் அத்தியாவசிய மருந்துகளின் மீதான 10% விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ் புதன்கிழமை மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய அத்தியாவசிய மருந்துகளின்(என்எல்இஎம்) கீழ் உள்ள பாராசிட்டமால் மற்றும் அசித்ரோமைசின் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மருந்துகள் விலை உயர்ந்ததாக மக்களவையில் அவர் கூறினார்.
இந்த மருந்துகளின் விலைகள் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளதால், மக்களின் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினார்.
இந்த முடிவைத் திரும்பப் பெறவும், உயிர்காக்கும் மருந்துகள் இந்திய மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்க உறுதிசெய்யவும் தான் அரசாங்கத்தை வலியுறுத்துவதாக காங்கிரஸ் எம்.பி. டீன் குரியகோஸ் கூறினார்.
நோய்த்தொற்று, காய்ச்சல், தோல் நோய்கள், இதய நோய்கள், ரத்தசோகை, வைட்டமின்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.