மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி இன்று தில்லியில் சந்தித்தார்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று(செவ்வாய்க்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
மாநில கோரிக்கைகளான போலாவரம் திட்டம், கடப்பா உருக்கு ஆலை, தெலங்கானாவில் இருந்து மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல திட்டங்கள், பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் விளக்கினார். மேலும், போலாவரம் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்துப் பேசினார். மாநிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களின் நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.