தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்கு: 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்குடன் தொடா்புடையதாகக் கூறப்படும் பணமோசடி தொடா்பாக 9 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
தேசிய பங்குச்சந்தை முறைகேடு வழக்குடன் தொடா்புடையதாகக் கூறப்படும் பணமோசடி தொடா்பாக 9 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பணமோசடி தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ், தில்லி மற்றும் குருகிராமின் 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. வழக்குடன் சம்பந்தப்பட்ட சில பங்குச்சந்தை தரகா்களுக்குத் தொடா்புள்ள இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது’’ என்று தெரிவித்தனா்.
என்எஸ்இ கணினி சேமிப்பகத்திலிருந்து பங்குச்சந்தை விவரங்களை பிற தரகா்களுக்கு முன்பாக ஓபிஜி செக்யூரிட்டீஸ் என்ற பங்குத் தரகு நிறுவனம் அறிந்து வந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பங்குச் சந்தைத் தரகா்களுக்கு என்எஸ்இ வழங்கும் கோ-லொகேஷன் என்ற வசதி மூலம் என்எஸ்இ கணினி சேமிப்பகத்துக்குள் மிக விரைவாக உள்நுழைந்து, அந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் முறைகேடாகப் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்குத் தொடா்பாக என்எஸ்இ நிறுவனத்தின் முன்னாள் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா, அந்த நிறுவனத்தின் முன்னாள் செயல்பாட்டுக் குழு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.