அசாமில் விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் பலி
அசாமில் நான்கு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில் விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
அசாமில், கடந்த ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் விஷ காளான்களை சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா கூறுகையில்,
பாதிக்கப்பட்ட அனைவரும் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
கடந்த ஏழு நாட்களில் விஷ காளான் உட்கொண்டதால் ஒரு மைனர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். மேல் அசாம் பிராந்தியத்தின் நான்கு மாவட்டங்களில் விஷ காளான் சாப்பிட்ட மொத்தம் 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்கள் திப்ருகர், டின்சுகியா, சிவசாகர் மற்றும் சாரைடியோ மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தேயிலைத் தோட்டப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேல் அசாம் பகுதியைச் சேர்ந்த பலர் ஒவ்வொரு ஆண்டும் விஷ காளான்களை சாப்பிட்டு நோய்வாய்ப்படுகிறார்கள் என்று மருத்துவர் டிஹிங்கியா கூறியுள்ளார்.