மும்பை: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று மும்பை பெட்டர் சாலையில் உள்ள திரைப்படப்பிரிவு வளாகத்தில் அமைந்துள்ள இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டார்.
இந்த அருங்காட்சியகம், குல்ஷன் மஹால் பாரம்பரிய கட்டடத்திலும், புதிய அருங்காட்சியக கட்டடத்திலும் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட அமைச்சர், திரைப்படங்கள் மீது குறிப்பாக இந்திய திரைப்படங்கள் மீது ஆர்வமுள்ளவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இடமாக தேசிய அருங்காட்சியகம் உள்ளது. நீங்கள் மும்பையில் அருங்காட்சியகத்துக்கு செல்லாவிட்டால், உங்களது மும்பை பயணம் முழுமையடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியத் திரைப்படத்துறை மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்த வரலாற்றைத் தெரிந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள திரைப்பட ஆர்வலர்கள், திரைப்படத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட வேண்டும். “தேசிய திரைப்பட அருங்காட்சியகத்தில் சிறிது நேரத்தை செலவழியுங்கள், அருங்காட்சியகம் உங்களை, எந்தவித நவீன தொழில்நுட்பமும், கருவிகளும், இல்லாமல் திரைப்படங்களை உருவாக்கிய நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்” என்று அவர் தெரிவித்தார்.
இன்று நாம் அனிமேஷன், விஷூவல் எஃபெக்ட்ஸ், கிராஃபிக்ஸ், கேமிங், தொழில்நுட்பம் பற்றியெல்லாம் பேசுகிறோம். ஆனால் இவையெல்லாம் இல்லாமலேயே அந்தக் காலத்தில் எவ்வாறு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன என்பதையும் மேலும், இதுவரை என்னென்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் இங்கு நம்மால் அறிந்து கொள்ளமுடியும்.
திரைப்படங்களை படம் பிடிக்க மிகப் பெரிய கேமராக்களை மலைப்பகுதிகளில் எடுத்துச் சென்று, இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், பட்ட சிரமங்களை சுட்டிக்காட்டியவர், தொழில்நுட்பம் எவ்வாறு மனித வாழ்க்கையையும், திரைப்படத் தயாரிப்பையும் எளிதாக்கியுள்ளது என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.