அகமதாபாத்: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று வியாழக்கிழமை இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அகமதாபாத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபகத்துக்கு வந்துள்ள போரிஸ் ஜான்சன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
இந்தியா-பிரிட்டன் இடையே ராணுவம், வா்த்தகம், மக்கள் தொடா்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படுத்தும் வகையில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு இன்று வியாழக்கிழமை காலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வந்தடைந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அகமதாபாத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும் ஜான்சன், பிரிட்டனில் முதலீடு செய்திருக்கும் முன்னணி தொழிலதிபா்களை சந்தித்து பிரிட்டன் மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் வணிக, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் குறித்து விவாதிக்கிறார். பிரிட்டனில் இருந்து முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொழில் நிறுவனங்களுக்குச் செல்கிறார்.
இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமான குஜராத்திற்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
வெள்ளிக்கிழமை காலை, ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும், பின்னர் மகாத்மா காந்தியின் சமாதிக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் ஜான்சன் கலந்து கொள்கிறார். பின்னர் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
பிரிட்டனில் கடந்த ஆண்டு ஜி7 உச்சிமாநாடு நடைபெற்றபோது கரோனா பரவல் காரணமாக, பிரதமா் மோடியால் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை. அந்த மாநாட்டில் அவா் காணொலி முறையில் பங்கேற்று உரையாற்றினாா். அதன் பிறகு கடந்த நவம்பரில் நடைபெற்ற கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் பிரதமா் மோடியும் போரிஸ் ஜான்சனும் நேரில் சந்தித்துக் கொண்டனா். போரிஸ் ஜான்சன் இதற்கு முன்பு 2 முறை இந்தியா வருவதற்கு திட்டமிட்டாா். ஆனால், கரோனா காரணமாக அவருடைய பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிக்க | பதவி விலக முன்வந்தாரா இலங்கை அதிபா்?