சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சஞ்சய் ரெளத் கைது செய்யப்பட்ட நிலையில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அழிப்போம் என சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக பணம் பரிமாற்றம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சஞ்சய் ரெளத் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து விசாரணைக்காக சஞ்சய் ரெளத்தை அமலாக்கத் துறையினர் அழைத்துச் சென்றனர். விசாரணையைத் தொடர்ந்து அவரை அமலாக்கத் துறை கைது செய்தது.
அதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் சஞ்சய் ரெளத் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனிடையே சஞ்சய் ரெளத் குடும்பத்தை சிவசேனை மூத்த தலைவர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது, எங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நாங்கள் நிரூபிப்போம். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை எதிர்கொண்டு வெல்வோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.