முகப்பு
இந்தியா

பென்சில் கேட்டால் அம்மா அடிக்கிறார்: விலை உயர்வு குறித்து மோடிக்கு சிறுமி கடிதம்

விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் துயரங்கள் குறித்து ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
விலை உயர்வு குறித்து மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி
பகிர்:


கன்னௌஜ்: விலைவாசி உயர்வால் தான் சந்திக்கும் துயரங்கள் குறித்து ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்புப் படித்து வரும் க்ருத்தி துபே, பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,

எனது பெயர் க்ருத்தி துபே. நான் முதலாம் வகுப்புப் படிக்கிறேன். மோடிஜி, நீங்கள் அதிக விலைவாசி உயர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். இதனால் எனது பென்சில் மற்றும் அழிப்பான் (ரப்பர்) கூட விலை அதிகரித்துவிட்டது. அது மட்டுமல்ல மேகி நூடுல்ஸ் விலையும் அதிகரித்துவிட்டது. நான் தற்போதெல்லாம் பென்சில் கேட்டால் எனது தாயார் என்னை அடிக்கிறார். நான் இப்போது என்னதான் செய்வது? மற்றவர்கள் எனது பென்சிலை திருடிவிடுகிறார்கள் என்று முத்துமுத்தான கையெழுத்தில் ஹிந்தியில், தனது நோட்டுப் புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கிழித்து எழுதியுள்ளார்.

இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது.

இது குறித்து, அவரது தந்தை விஷால் துபே என்ற வழக்குரைஞர் கூறுகையில், இது எனது மகளின் மனதின் குரல். பள்ளியில் பென்சிலை தொலைத்துவிட்டு வந்ததற்கு, அவரது தாயார் திட்டியதால் மிகவும் வேதனை அடைந்தார் என்றும் குறிப்பிட்டார்.

அது மட்டுமல்லாமல், அவர் தனது கடிதத்தில், என்னால் மேகி நூடுல்ஸ் வாங்க முடியவில்லை என்றும், தன்னிடம் வெறும் 5 ரூபாய் மட்டுமே உள்ளது. ஆனால் மேகி நூடுல்ஸ் தற்போது 7 ரூபாய் ஆகிவிட்டதாக கடைக்காரர் கூறுகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது சமூக வலைத்தளத்தில் பலரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

தனது மகன் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் கைப்பட எழுதிய கடிதத்தை, பதிவுத் தபாலில் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறாராம் அவரது தந்தை. எனது மகளின் கோரிக்கை நேரடியாக பிரதமரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக பதிவுத் தபாலில் அனுப்பியதாகக் கூறுகிறார்.

சமூக வலைத்தளத்தில் இந்தக் கடிதத்தைப் பார்த்த சிபிரமௌ மாவட்ட நீதிபதி அசோக் குமார், இந்தச் சிறுமிக்கு எந்த வகையிலும் உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன், இந்தக் கடிதம் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.