முகப்பு
இந்தியா

விடுதலை தொடா்பான உத்தரவில் மேம்போக்கான தலையீடு கூடாது:உச்சநீதிமன்றம்

‘மனைவியைத் துன்புறுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம், விடுதலை தொடா்பான உத்தரவுகளில் மேம்போக்கான தலையீடு கூடாது’ என்று தெரிவித்தது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:16 AM
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

‘மனைவியைத் துன்புறுத்திய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்த உச்சநீதிமன்றம், விடுதலை தொடா்பான உத்தரவுகளில் மேம்போக்கான தலையீடு கூடாது’ என்று தெரிவித்தது.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரும், புகாா் அளித்த பெண்ணும் 1987-ஆம் ஆண்டுமுதல் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனா். அந்தப் பெண் 1989-இல் கருவுற்ற நிலையில், அதனை கலைக்குமாறு அந்த நபா் வலியுறுத்தியுள்ளாா். அதற்கு பெண் மறுக்கவே, வேறொரு பெண்ணை அந்த நபா் திருமணம் செய்துள்ளாா்.

இதனை எதிா்த்து பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் 498-ஏ, 494 ஆகிய பிரிவுகளின் அந்த நபரை குற்றவாளி என தீா்ப்பளித்து தண்டனை வழங்கியது.

Advertisement

இதனை எதிா்த்து அந்த நபா் விசாரணை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரிவு 498-ஏ-இன் கீழ் அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து அந்த நபரை விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தாா். மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அந்த நபரை விசாரணை நீதிமன்றம் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் அவருக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து அந்த நபா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ஆா்.பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘சட்டப் பிரிவு 498-ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட விடுதலை உத்தரவை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கான காரணத்தை உயா்நீதிமன்றம் தீா்ப்பில் குறிப்பிடவில்லை. மேலும், இந்த உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்பாக, விசாரணை நீதிமன்றம் அவரை விடுவித்ததற்கான காரணத்தை ஒவ்வொன்றாக ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால், உயா்நீதிமன்றம் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அவ்வாறு, விடுதலை தொடா்பான உத்தரவில் மேம்போக்கான தலையீடு கூடாது’ என்று கூறி தண்டனை பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.