முடியும் தருவாயில் அமெரிக்கா - ஈரான் போர்; ஆனால், இன்னும் முடிவடையவில்லை: டிரம்ப்
அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதைப் பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தருவாயில் இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனாலும், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிறேன்.
நான் இப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தினால்கூட, அவர்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும். நாங்கள் இன்னும் முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஈரானியர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ள மிகவும் தீவிரமாக விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
Advertisement
ஈரானின் திட்டங்களை முறியடிக்க வேண்டிய சூழலில் இருந்தோம். ஈரானின் அணுசக்தித் திறன்களைச் சிதைப்பதற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்று நான் நினைக்கிறேன். ஈரானிடம் அணுசக்தித் திறன் இப்போது இருந்திருந்தால், நாம் அனைவரும் அவர்களை ‘சார்’ என்றுதான் அழைத்துக் கொண்டிருப்போம். அதனை யாரும் விரும்ப மாட்டார்கள்.
அடுத்த இரண்டு நாள்களில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இஸ்லாமாபாத் செல்வதற்கு நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்” என்றார்.
முன்னதாக, அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை அடுத்த 2 நாள்களில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா-ஈரான் இடையே அண்மையில் எட்டப்பட்ட 2 வார கால போர் நிறுத்தத்தின் தொடர்ச்சி யாக பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமை 21 மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப் படாமல் பேச்சு தோல்வியுற்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பதே பேச்சுவார்த்தையில் அமெரிக்கா விதித்துள்ள முக்கிய நிபந்தனையாக இருந்தாலும், அமெரிக்க தாக்குதலுக்கு சுமார் ரூ. 25 லட்சம் கோடி வரை இழப்பீடாக ஈரான் கோருவதாகவும் இதனால், பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.