புது தில்லி: நொய்டாவில் தலைமறைவாக இருக்கும் அரசியல்வாதி ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டில் முகப்பில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டுமானங்களை அரசுத் துறை அதிகாரிகள் இன்று காலை இடித்துத்தள்ளினர்.
கிராண்ட் ஒமாக்ஸி குடியிருப்புக் கட்டடத்தில், மற்றொரு குடியிருப்பில் வகிக்கும் பெண்ணை தாக்கி, இழிவாகப்பேசியதாக, தன்னை பாஜக அரசியல்வாதி என்று கூறிக் கொள்ளும் ஸ்ரீகாந்த் தியாகி மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார்.
குடியிருப்பின் பொதுவிடத்தில் மரங்கள் நடுவதற்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அடித்து, இழிவாகப் பேசியிருக்கிறார் தியாகி. இந்த சம்பவத்தில் அவருடன் நெருங்கிய கூட்டாளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜக ஒதுங்கியிருந்தாலும், கிசான் மோர்ச்சா அமைப்பின் செயல் உறுப்பினர் என்று தியாகி கூறி வந்ததாகக் கூறப்படுகிறது.