புது தில்லி: உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது நபருக்கு ஏழு வயது முதல் மிகவும் அரிதான மரபணுக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இரண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செயதுகொண்டு மறுவாழ்வு பெற்றுள்ளார்.
அவரது 27 வயது மூத்த சகோதரியிடமிருந்து கல்லீரலும், 46 வயது தாயிடமிருந்து சிறுநீரகமும் பெற்று, இரண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இவருக்கு ஏற்பட்ட மரபணுக் கோளாறு காரணமாக, இவரது கல்லீரல் உடலுக்குத் தேவையான நொதிகளை சுரப்பதில் சிக்கல் ஏற்பட்டு, அது உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு உடல் உறுப்புகள் செயலிழக்கும் ஆபத்துகள் நேரிட்டன. சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில், அவர் கடந்த ஜூன் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரல்தான் இவற்றுக்குக் காரணம் என்பதால், உடனடியாக இவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகம் என இரண்டு உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
சுமார் 16 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சைகள் நடைபெற்றன. சுமார் 21 நாள்களுக்குப் பிறகு அவர் பூரண உடல்நலத்துடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது அவர் வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குவந்து செல்வதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.