ரிக்ஷா ஓட்டுநருக்கு 90 விநாடிகளில் 17 அறைகள் கொடுத்த பெண்! வலுக்கும் கண்டனங்கள்!
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவர், ரிக்ஷா ஓட்டுநரை சாலையில் நிற்கவைத்து அறையும் காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் பெண் ஒருவர், ரிக்ஷா ஓட்டுநரை சாலையில் நிற்கவைத்து அறையும் காட்சிகள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அவர் 90 விநாடிகளில் 17 முறை ரிக்ஷா ஓட்டுநரின் கன்னத்தில் அறைந்து, அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துச் செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் விடியோ பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் சாலையோரம் நின்றிருந்த காரின்மீது ரிக்ஷா ஓட்டுநர் உரசியதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெண் காரிலிருந்து இறங்கிவந்து, ரிக்ஷா ஓட்டுநரை மடக்கி காரிடம் இழுத்து வருகிறார்.
பின்னர் பேசிக்கொண்டிருக்கும்போதே ரிக்ஷா ஓட்டுநரின் கன்னத்தில் கோபத்துடன் அறைகிறார். பின்னர் அவரின் சட்டையைப் பிடித்து ரிக்ஷா அருகே அழைத்துச்சென்று அறைகிறார். அதனைத் தொடர்ந்து மீண்டும் அவரது காரிடம் அழைத்து வந்து ஓட்டுநரின் சட்டைப்பையை கிழித்து பணத்தை எடுத்துக்கொள்கிறார். அதனைத் தடுத்த ஓட்டுநரை மீண்டும் அப்பெண்மணி அறைகிறார். அங்கிருந்த அனைவரும் இதனை வேடிக்கைப்பார்க்க, ஒருவர் விடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
அவர் 90 விநாடிகளில் 17 முறை ரிக்ஷா ஓட்டுநரை அறைந்துள்ளார். மேலும், தகாத வார்த்தைகளாலும் அவரை சாடியுள்ளார். இந்த விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ரிக்ஷா ஓட்டுநர் காரை உரசியிருந்தாலும், அதற்கு அப்பெண் அவ்வாறு நடந்துகொண்டதற்கு பலரும் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காரை உரசியது வேறொரு காராகவோ, அல்லது அரசு ஊழியர்களின் வாகனமாகவோ இருந்திருந்தால், அப்பெண் இவ்வாறு நடந்துகொண்டிருப்பாரா? எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.