பிகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் கூட்டணியில் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான முக்கிய நகர்வாக பார்க்கப்படும் இந்த ஆட்சி மாற்றத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், “பிகாரில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகவும், எதிர்காலத்தில் அவர்கள் அக்கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள் எனவும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
சமாஜவாதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கட்சியின் கட்டமைப்பு வேலைகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், பாஜகவிற்கு எதிரான வலிமையான அணி அமைந்தால் மக்கள் கட்டாயம் ஆதரவளிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.