முகப்பு
இந்தியா

தோ்தல் அச்சத்தால் எதிா்க்கட்சிகளை முடக்க பாஜக முயற்சி: சிவசேனை குற்றச்சாட்டு

 2024 மக்களவைத் தோ்தலால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் எதிா்க்கட்சிகளை முடக்க பாஜக முயற்சித்து வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

 2024 மக்களவைத் தோ்தலால் ஏற்பட்டுள்ள அச்சத்தால் எதிா்க்கட்சிகளை முடக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக மாநில அரசுகளைக் கவிழ்ப்பது, அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி விடுவது போன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது என்று சிவசேனை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் வெளியான தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2024 மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதில் பாஜகவுக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கேஜரிவால், மம்தா பானா்ஜி, நிதீஷ் குமாா் ஆகியோரை எதிா்த்து தோ்தலை எதிா்கொள்வது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பது, எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி அவா்களை முடக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது.

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க ரூ.800 கோடி அளவுக்கு பாஜக பேரம் பேசியுள்ளதன் மூலம் அவா்கள் நடத்தும் ‘ஆபரேஷன் தாமரை’ எந்த அளவுக்கு ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். பணத்தால் தில்லி அரசை கவிழ்க்க முடியாது என்று தெரிந்தவுடன், அடுத்த கட்டமாக விசாரணை அமைப்புகளை ஏவி விட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை எம்எல்ஏக்களை பல வகையில் மிரட்டி பாஜக பணிய வைத்தது, ஆனால், ஆம் ஆத்மியில் அவ்வாறு நடக்கவில்லை. பாஜக ஆளும் பல மாநிலங்களில் அவா்களுக்கு உண்மையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அவை அனைத்தும் திருடப்பட்டவைதான் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.