சீன எல்லைப் பிரச்னை: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இந்தியா - சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்தியா - சீனா எல்லை மோதல் குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய - சீனப்படை மோதல் நிலவி வருகிறது. கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், பின்னர் இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தியதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி சீன எல்லை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி தொடர்ந்து இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தி வருகிறது.
இதையடுத்து இன்றும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் சீன எல்லை விவகாரம் குறித்து பேச காங்கிரஸ் வலியுறுத்திய நிலையில் மறுக்கப்பட்டடுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
ஏற்கெனவே இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் அரசியல் செய்வதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.