திருப்பதி: குழந்தையில்லாத இரண்டு சகோதரர்களும், தங்களது பூர்வீக சொத்துகள், தங்களது பிள்ளைகளுக்கு வர வேண்டும் என்பதற்காக, தந்தையின் சொல்படி, மனைவிகளைக் கொன்று, தற்போது தந்தையோடு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆந்திர மாநிலம் நாண்டியால் மாவட்டம், நன்னூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில், முக்கியக் குற்றவாளியாக, மனைவிகளைக் கொன்றவர்களின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தனக்குப் பேரப்பிள்ளைகள் வேண்டும் அவர்களுக்கு தனது 60 கோடி மதிப்பிலான சொத்துகள் சென்று சேர வேண்டும் என்பதற்காக, பிள்ளைகளைத் தூண்டி, அவர்களது மனைவிகளைக் கொலை செய்யச் சொன்னக் குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால், மனைவிகளைக் கொன்றுவிட்டு, வேறு பெண்களை திருமணம் செய்து குழந்தைப் பெற்றுக் கொள்ள திட்டமிட்டனர் சகோதரர்கள்.
இது குறித்து ஓர்வகால் காவல்துறையினர் கூறுகையில், தங்களது மனைவிகளை விவசாயப் பகுதிக்கு அழைத்துச் சென்று சகோதரர்கள் இருவரையும் அடித்துக் கொன்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் விழுந்த ராமேஷ்வரி (26), ரேணுகா (23) இருவரும் துடிதுடித்து இறந்துள்ளனர். பிறகு வீட்டுக்குத் திரும்பிய சகோதரர்கள், தங்களது மனைவியை யாரோ சிலர் கொன்றுவிட்டதாக நாடகமாடினர்.
இதையும் படிக்க.. மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்திருக்கிறது.. ஆனால்: அதிர்ச்சி கொடுக்கும் செந்தில் பாலாஜி
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மோப்ப நாய் உதவியோடு விசாரணை நடத்திய போது, அவர்களுக்கு சந்தேகம் வந்தது. சந்தேகத்தின்பேரில் சகோதரர்களை விசாரித்ததில் உண்மை தெரிய வந்தது. தங்கள் மனைவிகளைக் கொன்றதை இருவரும் ஒப்புக் கொண்டனர். சொத்துக்கு ஆசைப்பட்டு இவ்வாறு செய்ததையும், தந்தை சொன்னதால்தான் கொலை செய்ததையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட பெண்களின் உறவினர்கள் அந்த கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.