கடந்த செப்டம்பா் வரையிலான காலத்தில் (இந்திய) மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன், ரூ. 147.19 லட்சம் கோடி என கடன் மேலாண்மை குறித்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மக்கள்தொகையுடன் இந்தக் கடனைக் கணக்கிட்டால் ஒவ்வொரு இந்தியரும் ரூ. 1,05,000 (ஒரு லட்சத்து ஐந்து ஆயிரம்) கடனாளியாக இருக்கின்றனர்.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரசின் கடன் ரூ.145.72 லட்சம் கோடியாக இருந்தது.
ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2-ஆவது காலாண்டில் கடன் ரூ. 147.19 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீதம் உயா்வாகும்.
2021 ஆம் ஆண்டின் கணக்கின்படி இந்திய மக்கள்தொகை 139.37 கோடி. தற்போது சுமார் 140 கோடி எனக் கொண்டு, மத்திய அரசு வாங்கியுள்ள ஒட்டுமொத்த கடன் தொகையான ரூ. 147.19 லட்சம் கோடியுடன் கணக்கிட்டால், இந்திய குடிமக்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 1,05,000 கடன் சுமை இருக்கிறது.
இந்தத் தொகை வெறும் மத்திய அரசின் கடன்கள் காரணமாக ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய கடன் மட்டுமே. மாநில அரசுகளின் கடன்களை எல்லாம் கணக்கிட்டால் ஒவ்வொரு தனிநபர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்குமோ தெரியவில்லை.
கடந்த சில நாள்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி 79.09-ஆக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, செப்டம்பா் 30-ஆம் தேதி 81.55-ஆக சரிந்தது.
இதேபோன்று, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4.9 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக ரிசர்வ் வங்கிய உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.