இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 56 பேரை விடுவிப்பதற்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, இன்று குடியேற்றத் தடுப்புக் காவல் மையத்துக்கு மாற்றப்படவிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைத் துறை அதிகாரிகள் இது குறித்துக் கூறுகையில், ஜனவரி 25ஆம் தேதி அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் சிறைத்துறையால் நடத்தப்படும் கரோனா தனிமைப்படுத்தும் மையத்துக்கு மாற்றப்பட்டனர்.
இதையும் படிக்க.. என்னவாகும் எதிர்காலம்? லட்சத்தில் கட்டணம் செலுத்தியும் மழலைகளுக்குக் கிடைக்காத பள்ளிக் கல்வி
அவர்களில் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களது தனிமைப்படுத்தும் காலம் இன்று நிறைவு பெறுகிறது. இதையடுத்து, அவர்கள் இன்று கொழும்புவியில் உள்ள குடியேற்ற தடுப்புக் காவல் மையத்துக்கு மாற்றப்படுகிறார்கள்.
மன்னாா் வளைகுடா பகுதியில் கடந்த டிசம்பர்மாதம் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. அவா்களை விடுவிக்குமாறு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது. குறிப்பாக, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்திய அரசு ஜனவரி மாதத் தொடக்கத்தில் நிதியுதவி அறிவித்தது. இதுதொடா்பாக, இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், இலங்கை நிதியமைச்சா் பசில் ராஜபட்ச இடையே நடந்த பேச்சுவாா்த்தையின்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
முன்னதாக, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விரைவில் விடுவிக்க வேண்டும் என்றும் டிசம்பர் மாதம் இந்தியா கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், இந்திய மீனவா்கள் கைதான விவகாரத்தை வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றம் ஜனவரி மாதம் விசாரித்தது. அதைத் தொடா்ந்து, அவா்கள் 56 பேரை விடுவிக்குமாறு அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.