அடல் சுரங்கப் பாதை உலக சாதனை புத்தகத்தால் அதிகாரப்பூர்வமாக 10,000 அடிக்கு மேல் நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக அங்கீகரிக்கப்பட்டு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் எல்லை சாலைகள் அமைப்பின்(பிஆர்ஓ) இந்த சாதனைக்கான விருதை தில்லியில் பிஆர்ஓ இயக்குநர் ராஜீவ் செளத்திரியிடம் உலக சாதனை அமைப்பு வழங்கியது.
மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கையும் இணைக்கும் 9.02 கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்க நெடுஞ்சாலை கடந்த அக்டோபர் 3, 2020ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அற்பணித்தார்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர்கள் (10,000 அடி) உயரத்தில், இமயமலையில் பிர் பஞ்சால் பகுதியில் அதிநவீன வரையறைகளுக்கு ஏற்ப இந்தச் சுரங்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும், பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதாகவும் இது இருக்கின்றது.
அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனைப் பகுதி, 3060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனையம் பகுதி 3071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு, டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது.
இந்த சுரங்கப்பாதை திறப்பதற்கு முன்னதாக அதிக பனிப்பொழிவு ஏற்படும் 6 மாதக் காலங்களுக்கு லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கிற்கான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.