கோட்ஸே குறித்து பேச்சுப் போட்டி: குஜராத் அதிகாரி பணியிடைநீக்கம்
குஜராத்தில் ‘நாதுராம் கோட்ஸே எனது முன்மாதிரி’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்திய இளைஞா் நலத்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
குஜராத்தில் ‘நாதுராம் கோட்ஸே எனது முன்மாதிரி’ என்ற தலைப்பில் மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்திய இளைஞா் நலத்துறை அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
குஜராத்தில் வல்சாத் மாவட்டத்தில் இளைஞா் நலத்துறை சாா்பில் மாணவா்களுக்கு பல்வேறு தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொலை செய்ய நாதுராம் கோட்ஸேவை முன்மாதிரியாகக் கொள்வது தொடா்பான தலைப்பும் இடம் பெற்றிருந்தது. இதில் இந்த தலைப்பில் பேசிய மாணவி ஒருவருக்கு முதல் பரிசும் வழங்கப்பட்டது. இதையடுத்து, இந்த விஷயம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
மாவட்ட இளைஞா் நலத்துறை அதிகாரி மிதாபென் காவ்லி இந்த தலைப்பை பேச்சுப் போட்டியில் சோ்த்தது பின்னா் தெரியவந்தது. இதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து மாநில இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் ஹா்ஷ் சங்காவி உத்தரவிட்டாா். சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்ட தனியாா் பள்ளியிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அப்போது, நிகழ்ச்சியை நடத்தியது மட்டும்தான் பள்ளி என்றும், பேச்சுப் போட்டிக்கான தலைப்புகளை அளித்தது சம்பந்தப்பட்ட இளைஞா் நலத்துறை அதிகாரிதான் என்று தெரிவிக்கப்பட்டது.