ஒரு வேளை, எதிர்பாராதவகையில், ஒருவரின் தலை பிளாஸ்டிக் கேனுக்குள் சிக்கிக் கொண்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அச்சச்சோ.. சாப்பிட முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது, மூச்சு கூட சரியாக விட முடியாது.
இது ஒரு கற்பனை என்றாலும், அதிபயங்கரமாக இருக்கிறதல்லவா. இது ஒரு சிறுத்தைக் குட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம் என்றால்?
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. ஏதோ ஒரு விலங்குக்குத்தானே என்று விட்டுவிடாமல், விலங்குகள் நல வாரிய அமைப்பினரும், வனத்துறையினரும், உள்ளூர் நிர்வாகத்தினர் என சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்றாக கரம்கோர்த்து, அந்த சிறுத்தைக் குட்டியை அதன் துயரத்திலிருந்து விடுவித்துள்ளனர்.
இந்த பிளாஷ்டிக் கேனிலிருந்து மீட்கும் முயற்சி 48 மணி நேரம் நீடித்தது.
வனப்பகுதியில், தலையில் ஒரு பிளாஸ்டிக் டப்பா மாட்டிக் கொண்ட நிலையில் அங்குமிங்கும் அலைந்து திரிந்த சிறுத்தைக் குட்டி ஒன்று பத்லாபூர் கிராமத்துக்கு அருகே தென்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வழியாகச் சென்றவர்கள் விடியோ எடுத்து வெளியிட்டிருந்தனர்.
உடனடியாக அதனைத் தேடும் பணி தொடங்கியது. சுமார் இரண்டு நாள்களுக்குப் பின் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு, அதற்கு மயக்க ஊசி போட்டு பிடித்து, அதன் தலையிலிருந்து பிளாஸ்டிக் டப்பா அகற்றப்பட்டது.
அந்த சிறுத்தை சுமார் இரண்டு நாள்களுக்கும் மேலாக உணவு,குடிநீர் இன்றி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்துஅதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு, சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு, அது தானாக நடக்க ஆரம்பித்ததும், வனப்பகுதியில் விடப்பட்டது.
மிகப்பெரிய வனப்பகுதி என்பதால், சிறுத்தையை தேடும் பணி மிகவும் சிக்கலாக இருந்தது. சிறுத்தையைப் பார்த்த பிறகும், அதனை பிடிப்பதற்கு குழுவினர் கடும் சிரமப்பட்டு, பிறகு பிளாஸ்டிக் கேன் அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.