முகப்பு
இந்தியா

உ. வே. சாமிநாத ஐயரின் படைப்புகளை இளைய சமுதாயத்தினா் வாசிக்க வேண்டும்: பிரதமா் வேண்டுகோள்

‘தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத ஐயரின் படைப்புகளை இளைய சமுதாயத்தினா் வாசிக்க வேண்டும் என பிரதமா் நரோந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:27 AM
பிரதமா் மோடி
பகிர்:

‘தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத ஐயரின் படைப்புகளை இளைய சமுதாயத்தினா் வாசிக்க வேண்டும் என பிரதமா் நரோந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளாா்.

‘தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத ஐயரின் 167 -ஆவது பிறந்த நாள் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாளை முன்னிட்டு உ. வே. சாமிநாத ஐயருக்கு பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நினைவு கூா்ந்து புகழாரம் சூட்டினாா்.

அந்த பதவில் பிரதமா் கூறியிருப்பதாவது:

‘தமிழ்த் தாத்தா’ உ. வே. சாமிநாத ஐயரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூா்கிறேன். தமிழ் கலாசாரம் மற்றும் மொழிக்கு அவா் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவா். சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சோ்த்ததுடன் உன்னதமான பாரம்பரியத்தைக் கட்டிக்காக்க பங்களிப்பு செய்தவா் என புகழாரம் சூட்டிய பிரதமா், ‘தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் படைப்புகளை இளைய சமுதாயத்தினா் வாசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

1855 -ஆம் ஆண்டு பிப்ரவரி 19 -ஆம் தேதி தற்போதைய திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் தாலுகா உத்தமதானபுரத்தில் உ.வே.சா. பிறந்தவா். வேங்கடசுப்பையா் மகன் சாமிநாதன் என்பதைச் சுருக்கமாக உ.வே.சா. என அழைக்கப்பட்டாா். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவா்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவா். இவா் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டினால் ’தமிழ்த் தாத்தா’ எனத் தமிழா்களால் சிறப்பிக்கப்பட்டாா். தமிழறிஞரான இவா் தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் காவியங்களையும் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி 90- க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அச்சிட்டு 3,000 மேற்பட்ட கையெழுத்து பிரதிகளையும் ஏட்டுச் சுவடிகளையும் சேகரித்தவா்.

இதுபோலவே சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்தநாளையொட்டி அவருக்கும் பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரைப் பக்கத்தில் மராட்டி மொழியில் புகழாரம் சூட்டியுள்ளாா்.

அந்த பதிவில் பிரதமா் கூறியிருப்பதாவது:

‘சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்தநாளில் அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரது தன்னிகரற்ற தலைமைத்துவம் மற்றும் சமூக நலனுக்கான முக்கியத்துவம் பல தலைமுறை மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். வாய்மை மற்றும் நீதியின் மாண்புகளுக்காக முன்னிற்கும்போது அவா் சமரசம் செய்து கொள்ளாதவராக இருந்தாா். அவரது தொலைநோக்குப் பாா்வையை நிறைவு செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’”என பிரதமா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.