நவாப் மாலிக்கிற்கு மார்ச் 3 வரை அமலாக்கத் துறை காவல்
தாவூத் இப்ராஹிம் பணமோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நவாப் மாலிக்கை மார்ச் 3 வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாவூத் இப்ராஹிம் பணமோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக்கை மார்ச் 3 வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாவூத் இப்ராஹிம் பணமோசடி வழக்கு தொடர்பாக நவாப் மாலிக்கை அமலாக்கத் துறை இன்று (புதன்கிழமை) கைது செய்தது. விசாரணையில் அவர் ஒத்துழைப்பு தரவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நவாப் மாலிக்கை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை கோரியது.
இதையும் படிக்க | உ.பி. மக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கும்: மோடி
ஆனால், அவரை மார்ச் 3-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவாப் மாலிக் வழக்கறிஞர் தாரிக் சயத் கூறுகையில், "மருந்துகளை உடன் எடுத்துச் செல்வது, அமலாக்கத் துறை காவலில் அவருக்கு வீட்டிலிருந்து உணவு வழங்குவது, வழக்கறிஞர்கள் முன்பு விசாரணை நடத்துவது தொடர்பான எங்களது மனுக்களை நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது" என்றார்.
நவாப் மாலிக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என மகாராஷ்டிர பாஜக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, நவாப் மாலிக் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படாது என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்தார்.