உ.பி. 5-ம் கட்ட தேர்தல்: 11 மணி நிலவரப்படி 21.39% வாக்குப்பதிவு
உத்தரப் பிரதேச 5-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேச 5-ம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21.39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.
சித்ரகூட், பிரயாக்ராஜ் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமேதி, ரேபரலி, ராமர் கோயில் அமையவுள்ள அயோத்தி தொகுதிகள் அடங்கும். இதனால், 5-ம் கட்ட வாக்குப்பதிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் பிரயாக்ராஜ் வாக்குச் சாவடியில் வாக்களித்தார். இதேபோல, காங்கிரஸ் தலைவர் பிஎல் புனியா பரபங்கி வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார்.
காலை 11 மணி நிலவரப்படி 21.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தால், 292 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடையும். மீதமுள்ள தொகுதிகளுக்கு மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.