புது தில்லி: கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்துவதாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
தில்லியில், கரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்கு பின், துணை முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,
“தில்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர பிற அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும்.
பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டத்தைத் தவிர்க்க பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
தில்லியில் கடந்த 8 முதல் 10 நாள்களில் 11,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வகை கரோனாவும் பரவி வருகின்றது. மருத்துவமனையில் 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 124 பேருக்கு ஆக்ஸிஜன் மற்றும் 7 பேர் வெண்டிலேட்டர் உதவியுடனும் இருக்கின்றனர்”
ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, உணவகம் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடுகள் என மஞ்சள் எச்சரிக்கை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.