திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா தொற்று பாதித்த 94 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: "கரோனா தொற்று பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளில் 94 சதவிகிதம் பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 சதவிகிதம் பேருக்கு டெல்டா தொற்று பாதிப்பு உள்ளது."
பிற இடங்களில் இருந்து கேரளம் வந்து தொற்று பாதித்தவர்களில் 80 சதவிகிதம் பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். மீதமுள்ள 20 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | குறையும் கரோனா: நாட்டில் புதிதாக 2.51 லட்சம் பேர் பாதிப்பு
மேலும் கரோனா பாதித்தவர்களில் 3.6 சதவிகிதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், அவர்களில் 0.7 சதவிகிதம் பேருக்கு ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுவதாகவும் மற்றும் 0.6 சதவிதம் பேருக்கு ஐசியூ தேவைப்படுகிறது," கேரளத்தில் மூன்றாவது அலை ஒமைக்ரான் அலை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார்.
கேரளத்தில் நேற்று புதிதாக மேலும் 51,739 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 58.26 லட்சமாக உயர்ந்துள்ளது.