அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படையில் சோ்வதற்கு விண்ணப்பிக்கும் காலவரை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 7.5 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.
இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப் படையில் வீரா்களை சோ்ப்பதற்கான இணையவழி பதிவு நிறைவடைந்தது. கடந்த முறை ஆள் சோ்ப்பின்போது 6,31, 528 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்த முறை 7,49,899 போ் விண்ணப்பித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்குப் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது.
இத்திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும், இந்திய விமானப் படையில் அக்னிவீரா்களை சோ்ப்பதற்கான பதிவு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமையுடன் இணையவழிப் பதிவு நிறைவடைந்தது.