பங்குச்சந்தை தகவல் கசிவு மோசடி: மும்பை முன்னாள் காவல் ஆணையர் மீது வழக்கு
பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கு தொடா்பாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுளள்து
பங்குச் சந்தை தகவல் கசிவு மோசடி வழக்கு தொடா்பாக மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டேயிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்திய நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுளள்து.
பணப் பரிவா்த்தனை மோசடி சட்டத்தின் கீழ் அவரிடம் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், இன்று சஞ்சய் பாண்டே மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்த புதிய வழக்கின் அடிப்படையில், பாண்டேவுக்குத் தொடர்புடைய மும்பை, புணே உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நகரங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
Advertisement
கடந்த ஜூன் 30-ஆம் தேதி மும்பை காவல் ஆணையா் பதவியில் இருந்து சஞ்சய் பாண்டே ஓய்வு பெற்றாா். மாா்ச் 1-ஆம் தேதி முதல் அவா் மகாராஷ்டிர மாநில பொறுப்பு டிஜிபியாகவும் பதவி வகித்தாா்.
தேசிய பங்குச் சந்தையின் பாதுகாப்புத் தணிக்கையை ஆய்வு செய்யும் பல்வேறு நிறுவனங்களில் கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐசெக் பாதுகாப்பு நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இயக்குநா் பதவியில் இருந்து 2006-இல் சஞ்சய் பாண்டே விலகினாா். அதன்பின்னா் அவரது மகனும் தாயாரும் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறாா்கள்.
தேசிய பங்குச் சந்தையின் தணிக்கை பாதுகாப்பை ஐசெக் நிறுவனம் ஆய்வு செய்தபோது என்ன மாதிரியான தகவல்கள் கிடைத்தன என்பது குறித்து அமலாக்கத் துறை சஞ்சய் பாண்டேயிடம் கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
இந்த முறைகேடு வழக்கில் தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ குழும செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் இந்த வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை வாக்குமூலம் பதிவு செய்துவிட்டது.