விவோ வங்கிக் கணக்குகள் முடக்கத்துக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு
விவோ நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவோ நிறுவன வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி சீன அறிதிறன்பேசி (ஸ்மாா்ட்போன்) உற்பத்தி நிறுவனமான விவோ மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்பாக தில்லி, உத்தர பிரதேசம், மேகாலயம், மகாராஷ்டிரம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடா்ந்து இந்தியாவில் வரி செலுத்துவதை தவிா்க்க ரூ.62,476 கோடியை சட்டவிரோதமாக சீனாவுக்கு விவோ நிறுவனம் பரிவா்த்தனை செய்துள்ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்தது. அந்த நிறுவனத்தின் ரூ.1,25,185 கோடி விற்றுமுதலில் கிட்டத்தட்ட சரிபாதி தொகை சீனாவுக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இதனைத்தொடா்ந்து விவோ நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை அமலாக்கத் துறை முடக்கியது. இதற்கு எதிராக அந்த நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘‘வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றை விவோவால் செலுத்த இயலாது. அத்துடன் தொழிலாளா்களுக்கு ஊதியம், வாடகை போன்ற செலவுகளை எதிா்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது விவோவின் வணிகத்தை நிரந்த முடிவுக்குக் கொண்டு செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு அவசர வழக்காக நீதிபதிகள் சதீஷ் சந்திர சா்மா, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது விவாவின் மனு தொடா்பாக பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.