மகாராஷ்டிரத்தில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மகாராஷ்டிரத்தின் பந்தாரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், 13 பேர் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். இதனை காவல் துறை உறுதி செய்துள்ளது.
இதையும் படிக்க: கேரளத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வந்தவருக்கு பரிசோதனை
இந்த விபத்து குறித்து காவல் துறை அதிகாரி ஜித்தேந்திர பொர்கார் கூறியதாவது: “இந்த விபத்து சகோலி காவல் நிலைய எல்லைக்குள் மோகட்டா வனப்பகுதிக்கு அருகில் காலையில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிக்கிய அனைவரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று திரும்புகையில் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர் முன்னே நின்று கொண்டிருந்த வாகனத்தை கவனிக்கத் தவறியதே இந்த விபத்திற்கு காரணம். நின்று கொண்டிருந்த வாகனத்தை கவனிக்காமல் அதன் மீது பேருந்து வேகமாக மோதியுள்ளது. வாகனத்தின் மீது பேருந்து வேகமாக மோதியதில் பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது.
புஷ்பாஞ்சலி ரூப்குமார் சர்மா (54 வயது), சந்திரகார் (36 வயது) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 13 பேர் லேசான காயங்களுடன் சகோலி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.” என்றார்.