ஜனநாயகத்தைக் காப்பாற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ தெரிவித்துள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹ, 'நான் அரசியல் போராட்டத்தை மட்டும் முன்னெடுக்கவில்லை. அரசு நிறுவனங்களுக்கு எதிராகவும் போராடுகிறேன். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்களாகிவிட்டனர். கட்சிகளை உடைத்து மக்களை தங்களுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர். இதில் பண விளையாட்டும் சம்மந்தப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதை அமைக்கும். தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்கள் மனம் சொல்வதைக் கேட்டு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது ரகசிய வாக்கெடுப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற தங்கள் விருப்பத்தின்பேரில் என்னை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்: தில்லியில் பிரதமர் மோடி வாக்களித்தார்
குடியரசுத் தலைவர் தேர்தல்
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று (திங்கள்கிழமை) நடைபெறுகிறது. அதில், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களிக்கின்றனர். எம்.பி.க்களும், எம்எல்ஏக்களின் வசதிக்கேற்ப, மாநிலங்களில் உள்ள தலைமைச் செயலகங்களிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. கரோனா பரவல் தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்து வாக்குப்பதிவினை தொடக்கிவைத்தார். தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர்.
தோ்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முா்முவும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்