தனியார் நிறுவனங்களுக்கு மாற்றாக டாக்சி சேவையை அரசே ஏற்று நடத்தும் வகையிலான புதிய செயலியை கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒரு இடத்திலிருந்து பிற இடங்களுக்கு செல்வதற்கு இன்றைய காலகட்டத்தில் டாக்சி பயன்பாடு தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட தூரத்திற்கு கட்டணம் எனத் தொடங்கிய தனியார் டாக்சி சேவை தற்போது முன்பை விட கூடுதல் கட்டணங்களில் செயல்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு ஓலா, உபர் உள்ளிட்ட தனியார் டாக்சி செயலிகள் மட்டுமே இந்தத் துறையில் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு மாநில அரசும் இவற்றுக்கு மாற்றாக களமிறங்கியுள்ளது கவனிக்கப்படக் கூடியதாக மாறியிருக்கிறது.
இதையும் படிக்க | ஓராண்டில் 796 உபா வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்
அத்தியாவசியமாக மாறியுள்ள டாக்சி சேவையை மக்களுக்கு கிடைக்கும் வகையில் அனைவருக்கும் டாக்சி சேவை எனும் முழக்கத்துடன் கேரளா சவாரி எனும் புதிய செயலியை கேரள மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கேரள தொழிலாளர் துறையின் முன்னெடுப்பில் உருவாகியுள்ள இந்தத் திட்டம் காவல்துறை, போக்குவரத்துத் துறை மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப இயக்கம் உள்ளிட்டவற்றின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இதற்கான அறிமுக விளம்பரங்கள் வெளியான நிலையில் இந்த மாதம் முதல் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல் பயணக்கட்டணத்தில் 8 சதவிகிதம் மட்டுமே ஓட்டுநரிடமிருந்து மாநில அரசு வசூல் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | கேரளத்தில் இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம்
ஏற்கெனவே தனியார் ஓடிடி தளத்திற்கு மாற்றாக கேரள மாநில அரசு, ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் தற்போது டாக்சி சேவையையும் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது. இதன்மூலம் அரசு டாக்சி சேவை வழங்கும் முதல் மாநிலம் எனும் பெருமையை கேரள அரசு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.