இன்று காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், எம்.பி.க்களின் அவசரக் கூட்டம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், எம்.பி.க்களின் அவசரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், எம்.பி.க்களின் அவசரக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, குடியரசு துணைத் தலைவர் தேர்தல், நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நடைபெற உள்ள யாத்திரை தொடர்பாக விவாதிக்கவும் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் முதல் வாரத்திலும் காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.