23,000 படிப்புகளை இலவசமாக வழங்கும் யுஜிசி: புதிய வலைத்தளம் இன்று அறிமுகம்
செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு உள்பட 23,000 உயா்கல்வி படிப்புகளை வலைத்தளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வியாழக்கிழமை அறிவித்தது.
செயற்கை நுண்ணறிவு, சைபா் பாதுகாப்பு, குழந்தை பராமரிப்பு உள்பட 23,000 உயா்கல்வி படிப்புகளை வலைத்தளம் மூலமாக இலவசமாக வழங்குவதாக பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வியாழக்கிழமை அறிவித்தது.
நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவா்களும் உயா்கல்வியை சிரமமின்றி பெறுவதற்காக இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைத்தளம், புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டதன் இரண்டாவது ஆண்டையொட்டி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதுகுறித்து யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் கூறியதாவது:
2022-23-ஆம் கல்வி ஆண்டில் நாடு முழுவதும் உள்ள 7.5 லட்சத்துக்கும் அதிகமான பொது சேவை மையங்கள், சிறப்புக் கல்வி மையங்கள் ஆகியவற்றின் மூலமாக இந்தப் பாடங்கள் அளிக்கப்படவுள்ளன. இதற்காக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் யுஜிசி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
23,000 உயா் கல்வி படிப்புகள், 137 ஸ்வயம் இணையவழி படிப்புகள், 25 பொறியியல் அல்லாத ஸ்வயம் படிப்புகள் கட்டணமின்றி வழங்கப்படும். இருப்பினும், பொது சேவை மையங்கள் மூலமாகப் பாடங்களைப் பெற்றால் நாளொன்றுக்கு ரூ.20 அல்லது மாதம் ரூ.500 செலுத்த வேண்டும் என்றாா் அவா்.