தில்லி: விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக பலரை ஏமாற்றியவர் கைது
தில்லியில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக 90 பேரை ஏமாற்றிய நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக 90 பேரை ஏமாற்றிய நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ எங்களுக்கு யோகேந்தர் சிங் என்பவரிடம் இருந்து புகார் கிடைத்தது. அந்தப் புகாரில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாகக் கூறி இணையதளம் ஒன்றில் மோசடி நடப்பதாகக் கூறினார். இது குறித்து விசாரணை நடத்தியபோது அந்த போலியான இணையதளத்தின் மூலம் இதுவரை 90 பேர் ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் அவிரல் ரவால் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிந்தது. ரவாலிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்த இணையதளத்தை கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கியதாக தெரிவித்தார். அதன்பின் மக்களுக்கு கவர்ச்சியான தள்ளுபடிகளைக் கொடுத்து தனது ஏமாற்று வலையில் விழ வைத்துள்ளார். டிக்கெட் பதிவு செய்தவர்களிடம் பணத்தினைப் பெற்ற பிறகு மின்னஞ்சல் மூலம் அவர்கள் டிக்கெட் நிராகரிக்கப்பட்டதாகவும், அடுத்த 4-5 நாட்களில் அவர்களது பணம் திருப்பியளிக்கப்படும் எனவும் ரவால் தெரிவித்துள்ளார். ஆனால், அதன் பின் எந்த ஒரு பணமும் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுவதில்லை” என்றனர்.