பாடகரும் அரசியல்வாதியுமான சித்து மூஸ்வாலா கொலையைத் தொடர்ந்து மாநில அரசு எதிர்க்கட்சித் தாக்குதலை எதிர்கொண்டுள்ள நிலையில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தனது கட்சி தலைவரான அரவிந்த் கேஜரிவாலை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இது சாதாரண சந்திப்பு என்று ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.
கடந்த மே 29 அன்று பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மூஸ்வாலா சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவருடன் ஜீப்பில் பயணித்த அவரது உறவினர் மற்றும் நண்பர் ஒருவரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதித்துறை கமிஷன் அமைக்கப்படும் என மான் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநில அரசு எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, அதைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் கேஜரிவால்-மான் சந்திப்பு இன்று நடைபெற்றுள்ளது.