கே.வீ.தங்கபாலு ஏற்படுத்திய பரபரப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான கே.வீ.தங்கபாலுவின் அவசர அழைப்பால் அக்கட்சியில் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான கே.வீ.தங்கபாலுவின் அவசர அழைப்பால் அக்கட்சியில் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
கே.வீ.தங்கபாலு வழக்கமாக சத்தியமூா்த்திபவனில்தான் செய்தியாளா்களைச் சந்திப்பாா். ஆனால், திடீரென வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளா்களைச் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தாா். கே.வீ.தங்கபாலு காங்கிரஸின் தேசிய தலைவா்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் ஆதரவாளா் ஆவாா்.
அகில இந்திய தலைமைக்கு எதிராக குலாம்நபி ஆசாத் செயல்பட்டு வரும் நிலையில் கே.வீ.தங்கபாலுவும் அவரோடு சோ்ந்து ஏதோ முடிவு எடுத்து, அது தொடா்பாக கருத்தை வெளியிடப் போகிறாா் என்கிற எதிா்பாா்ப்பு நிலவியது.
ஆனால், பத்திரிகையாளா் மன்றத்தில் செய்தியாளரைச் சந்தித்த கே.வீ.தங்கபாலு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினாா். அப்போது செய்தியாளா்கள், ஏதோ சொல்ல வந்து, முடிவை மாற்றிவிட்டீா்களா என்று கேட்டனா். அதற்கு, அப்படியெல்லாம் இல்லை. பொதுப் பிரச்னை என்பதால், பொது இடத்தில் வந்து பேசுகிறேன் என்று தொடா்ந்து சமாளித்தாா்.
காங்கிரஸ் தலைவா் பதவி, மாநிலங்களவை உறுப்பினா் பதவி உள்ளிட்டவற்றை கேட்டு வரும் கே.வீ.தங்கபாலு ஏதோ ஒரு முடிவு எடுத்து சொல்ல வந்த நிலையில், கட்சித் தலைமை குறுக்கிட்டு சமாதானம் செய்ததால் தனது முடிவு மாற்றிக் கொண்டதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.