நேஷனல் ஹெரால்டு: வெள்ளிக்கிழமையும் ஆஜராக ராகுலுக்கு சம்மன்
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமையும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம் கடந்த மூன்று நாள்களாக விசாரணை நடத்திய நிலையில், வெள்ளிக்கிழமையும் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. சோனியா காந்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கோரியுள்ளார். அமலாக்கத் துறையும் இதற்கு அனுமதி வழங்கியது.
ராகுல் காந்தி முதன்முதலாக கடந்த திங்கள்கிழமை அமலாக்கத் துறை விசாரணை முன்பு ஆஜரானார். இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமையும் அமலாக்கத் துறை அவரிடம் விசாரணை நடத்தியது.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெறுமா மம்தா முயற்சி?
புதன்கிழமை அவரிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நிறைவடைந்த நிலையில், இரவு 9.30 மணியளவில் அவர் அமலாக்கத் துறை தலைமையகத்திலிருந்து வெளியேறினார்.
ராகுல் காந்தியிடம், இதுவரை மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது அமலாக்கத் துறை.
இந்த நிலையில், வியாழக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தெரிவித்தது. வியாழக்கிழமை ஆஜராவதற்கு ராகுல் காந்தி விலக்கு கேட்டதால், வெள்ளிக்கிழமை ஆஜராவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியிடம் தொடர் விசாரணை நடத்தி வருவது மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் செயல் எனக் குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியினர், அமலாக்கத் துறைக்குச் செல்லும் சாலைகளில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.