புது தில்லி: பாதுகாப்புத்துறை அமைச்சக வேலைகளில் அக்னிவீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய ராணுவ ஆள்சேர்ப்புத் திட்டமான 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் 10 சதவீத வேலைகளை அக்னிவீரர்களுக்காக மத்திய அரசு ஒதுக்குவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அக்னிபத்: தமிழ்நாடு ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
இந்திய கடலோர காவல்படை மற்றும் பாதுகாப்பு பொதுப் பதவிகள், 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இந்த இடஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, தற்போதுள்ள இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக இருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரை பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான 'அக்னிபத்'-க்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதலை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதையும் படிக்க: கேரளத்திலும் அக்னிபத் போராட்டம்
ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான அக்னிபத் திட்டத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழம்மை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் ரயில்கள் உள்ளிட்ட பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ரயில்களுக்குத் தீ வைக்கப்பட்டன.