கேரளத்திலும் அக்னிபத் போராட்டம்
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் கேரளத்திலும் சனிக்கிழமை தொடங்கியது.
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் கேரளத்திலும் சனிக்கிழமை தொடங்கியது.
இந்தத் திட்டத்துக்கு எதிராக மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள தம்பனூரிலிருந்து ஆளுநர் மாளிகை வரை பேரணி நடத்தப்பட்டது. கோழிகோட் ரயில் நிலையம் முன்பும் இதுமாதிரியான போராட்டம் நடைபெற்றது.
தம்பனூர் ரயில் நிலையத்தில் காலை 9.30 மணியளவில் ஏறத்தாழ 500 இளைஞர்கள் கூடினர். படிப்படியாக போராட்டக்காரர்கள் எண்ணிக்கை கூடியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திருவனந்தபுரம் வந்தடைந்தனர்.
இதையும் படிக்க | அக்னிபத்: உச்ச நீதிமன்றத்தில் மனு
போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் கடந்த 2021-இல் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அடுத்த சுற்றுக்காகக் காத்திருப்பவர்கள். முன்பே நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டு பிறகு 6 முறை ஒத்திவைக்கப்பட்ட ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வினை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.
பிஎஸ் பிரனவ் எனும் 22 வயது இளைஞர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், சனிக்கிழமை போராட்டம் நடத்த விண்ணப்பதாரர்கள் வாட்ஸ் அப் குழுவில் முடிவு செய்யப்பட்டு தம்பனூரில் கூடியதாகத் தெரிவித்தார்.
கேரளத்தில் 5000 இளைஞர்கள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு எழுதுவதற்காகக் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.