பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆளாக நேரிடும் என கடந்த ஆண்டு சிவசேனை எம்எல்ஏ எழுதிய கடிதம்
ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரத்தில் ஆளும் சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டிருக்கும் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ பிரதாப் சர்நாயக் எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் சிவசேனை தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், 'பாஜகவுக்கு எதிராக செயல்பட்டால் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதனால் மீண்டும் பாஜகவுடன் இணைய வேண்டும்' என்று கூறியுள்ளார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததில் மகிழ்ச்சி இல்லை என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை தற்போது அவரது உதவியாளர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.