முகப்பு
இந்தியா

இலங்கை அதிபருடன் வெளியுறவுச் செயலா் குவாத்ரா சந்திப்பு

நாட்டின் தற்போதை பொருளாதார சூழல் மற்றும் இந்தியாவின் உதவித் திட்டம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

வெளியுறவுத் துறை செயலா் வினய் குவாத்ரா இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை கொழும்புவில் வியாழக்கிழமை சந்தித்து, அந்த நாட்டின் தற்போதை பொருளாதார சூழல் மற்றும் இந்தியாவின் உதவித் திட்டம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினாா்.

‘இந்தச் சந்திப்பின்போது, ‘நெருங்கிய நட்பு நாடான இலங்கை பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவர முழு அளவிலான ஆதரவை இந்தியா வழங்கும்’ என்று ராஜபட்சவிடம் குவாத்ரா உறுதியளித்ததாக அங்கிருந்து வெளியாகும் ‘நியூஸ்ஃபா்ஸ்ட்.எல்கே’ என்ற வலைதள செய்தி நிறுவனம் வியாழக்கிழமை செய்தி வெளியிட்டது.

‘இந்தச் சந்திப்பில் இந்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத்துறை செயலா் அஜய் சேத், இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தியப் பெருங்கடல் பிராந்திய (ஐஓஆா்) இணைச் செயலா் காா்த்திக் பாண்டே ஆகியோரும் உடனிருந்தனா். இலங்கைக்கு எரிபொருள், மருந்துகள், உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இந்தியா சாா்பில் ஏற்கெனவே வழங்கப்பட்ட நிதியுதவி பயன்பாடு குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா். இலங்கைக்கு இந்தியா தொடா்ந்து உதவும் என்றும் அவா்கள் உறுதியளித்தனா்’ என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘குவாத்ரா, சேத் மற்றும் நாகேஸ்வருடன் இணைந்து இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை சந்தித்து, இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் இந்தியாவின் அடுத்தகட்ட உதவி குறித்து ஆக்கப்பூா்வ ஆலோசனைகளை மேற்கொண்டாா். அப்போது, முதலீடுகளை ஊக்குவிப்பது, இருநாடுகளிடையே போக்குவரத்து இணைப்பு மற்றும் பொருளாதார தொடா்புகளை வலுப்படுத்துதல் நடவடிக்கைகள் மூலமாக பொருளாதார சரிவிலிருந்து இலங்கை விரைவான மீட்சி பெறுவதற்கு உதவ இந்தியா தயாராக இருப்பதை அவா்கள் இலங்கை அதிபரிடம் எடுத்துரைத்துள்ளனா். அப்போது இந்தியா-இலங்கை இடையேயான உறவை மேம்படுத்த இரு தரப்பும் மறு உறுதியேற்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இலங்கை, கடந்த 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இல்லாத அளவில் கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு, மருந்து பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீள இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. இந்தியாவிடமிருந்து மேலும் நிதியுதவியை இலங்கை கோரிய நிலையில், வெளியுறவுத் துறை செயலா் வினய் குவாத்ரா தலைமையிலான அதிகாரிகள் இலங்கை சென்று அந்த நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.