முகப்பு
இந்தியா

பாஜக வரலாறு படைத்துள்ளது: பிரதமர் மோடி

​5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:


5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. பஞ்சாபில் பின்னடைவைச் சந்தித்தாலும் மற்ற இடங்களில் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கிறது.

இதையொட்டி, தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்துக்கு மூத்த தலைவர்கள் வருகை தந்தனர். அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர்.

பிரதமர் மோடி பேசியதாவது:

"மார்ச் 10-ம் தேதி முதல் ஹோலி பண்டிகை தொடங்கும் என நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தோம். இது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொண்டர்கள் பெற்றுத் தந்த வெற்றி. ஜனநாயகத் திருவிழாவில் பங்கெடுத்து பாஜகவின் வெற்றியை உறுதி செய்த அனைத்து வாக்காளர்களுக்கு நன்றி.

உத்தரப் பிரதேசத்தில் முதன்முறையாக முதல்வர் ஒருவர் இரண்டாவது முறையாகத் தேர்வு செய்யப்படுகிறார்.

2017-இல் உத்தரப் பிரதேசத்தில் நாம் பெற்ற வெற்றியே 2019-இல் நாம் மத்தியில் ஆட்சிக்கு வந்ததற்குக் காரணம் என வல்லுநர்கள் கூறினர். அதே வல்லுநர்கள் 2022 தேர்தல் முடிவு 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவையும் தீர்மானிக்கும் எனக் கூறுவார்கள் என நம்புகிறேன்.

கோவாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. உத்தரகண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பாஜக புதிய வரலாறு படைத்துள்ளது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.