மாநிலங்களவைத் தேர்தலுக்கான உறுப்பினர்களை உறுதி செய்யும்பொருட்டு கேரள காங்கிரஸ் தலைவர்கள் இன்று அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை தில்லியில் சந்தித்தனர்.
கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாநிலங்களவைத் தேர்தலுக்கான உறுப்பினர்களில் கேரள காங்கிரஸ் சார்பில் எம்.லிஜு மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இருக்கலாம் என்று தெரிவித்தார்.
மேலும், மாநிலங்களவைத் தொகுதிக்கான வேட்புமனு குறித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருடன் விவாதித்தேன். இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று இருவரும் தெரிவித்தனர். எம் லிஜூ மட்டுமல்ல, கிருஷ்ணனையும் கருத்தில்கொள்ளலாம் என்றனர்.
வேட்பாளர்களின் பெயர்கள் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பப்படும். தலைமை இறுதி முடிவை எடுக்கும். கட்சிக்குள் உள்ள அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும்' என்றார்.
காங்கிரஸின் ஏ.கே.ஆண்டனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.சோமபிரசாத் மற்றும் லோக்தந்திரிக் ஜனதா தளத்தின் (எல்.ஜே.டி) எம்.வி.ஷ்ரேயாம்ஸ் குமார் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைவதன் காரணமாக கேரளத்தில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.