செல்லிடப் பேசிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் கரோனா காலர் ட்யூன் விரைவில் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டும் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவத் தொடங்கியது. நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தன.
பொது இடங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல், தொலைக்காட்சிகளில் விளம்பரம், செல்லிடப்பேசிகளின் காலர் ட்யூன் என அனைத்து வகையிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதில், கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை செல்லிடப்பேசிகள்வழி மத்திய அரசு தொடங்கியது.
இதையும் படிக்க | சென்னை தனியார் பள்ளி வேன் மோதியதில் மாணவர் பலி
செல்லிடப்பேசிகள் மூலம் ஒருவரை தொடர்பு கொண்டால் முதலில் இருமல் சத்தத்துடன் தொடங்கும் கரோனா விழிப்புணர்வுக்கு பிறகுதான் குறிப்பிட்ட நபருக்கு போன் போகும் வகையில் ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனமும் மத்திய அரசுடன் இணைந்து விழிப்புணர்வு செய்தன.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது மூன்று அலைகள் முடிவடைந்து தினசரி கரோனா எண்ணிக்கையானது 2,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதனால், செல்லிடப் பேசிகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் கரோனா காலர் ட்யூனை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.