இந்தியா

வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம்

DIN

கல்வி, அரசு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி வாதங்கள் முடிந்த நிலையில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று கூறி, இந்த வழக்கில் தமிழக அரசின்  மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி உள்ஒதுக்கீடுக்கு வகை செய்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி சட்டம் செல்லாது என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பாமக, தமிழக அரசு, பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தை டிசம்பர் 15-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இதுதொடர்பாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

அதன் பிறகு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் மனு சிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல் ரோத்தகி, மனுதாரர் சி.ஆர். ராஜன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், பாமக தரப்பில் மூத்த வழக்குரைஞர் எம்.என்.ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ். நாகமுத்து, ஆர்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால், 3 தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. 

அதில், வன்னியருக்கான 10.5% உள்ஒதுக்கீடு செல்லாது எனக் கூறிய உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசு, பாமக உள்ளிட்டோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கை, சாதியை மட்டும் அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது என அந்த மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

* வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும்.

* மிகவும் பிற்படுத்தட்டோர் பிரிவில் மீதமுள்ள 115 சமூகங்களில் இருந்து வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனவே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம்." என்று பெஞ்ச் கூறியது.

 * வன்னியர் உள்ஒதுக்கீடு சட்டம் அரசியல் 14,15 மற்றும்16 பிரிவுகளுக்குவிதிகளை மீறுகிறது.  இது  விரோதமானது.

* உள்ஒதுக்கீடு வழங்கும்போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும். 

* உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும் என தெரிவித்துள்ளது. 

"சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு இடஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது"என நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அப்போதைய அதிமுக அரசு நிறைவேற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT