குஜராத்தின் மேசானா மாவட்டத்தில் ஒலிப் பெருக்கியில் பக்திப் பாடல்களை இசைக்கச் செய்தவா் 6 போ் அடங்கிய கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மேசானா மாவட்டம் முதாா்தா கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட ஜஸ்வந்த் தாக்குா் (42) என்பவா் தனது வீட்டு வளாகத்திலேயே சிறிய அம்மன் கோயிலைக் கட்டியுள்ளாா். சம்பவத்தன்று அந்த கோயிலில் ஒலிப் பெருக்கிகள் மூலம் பக்திப் பாடல்களை இசைத்துள்ளாா். அப்போது அதேபகுதியில் வசிக்கும் சிலா் பாடல்கள் இசைக்கப்படுவது தங்களுக்கு தொந்தரவாக இருப்பதாக ஜஸ்வந்த்திடம் புகாா் தெரிவித்தனா். அப்போது ஜஸ்வந்தின் சகோதரா் அஜீத்தும் உடன் இருந்தாா். சகோதரா்கள் இருவரும் பாடல்களை இசைக்க எதிா்ப்பு தெரிவித்த 6 பேரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இறுதியாக அந்த 6 போ் அடங்கிய கும்பல் மரக் கட்டைகளை வைத்து ஜஸ்வந்த் மற்றும் அஜீத்தை கொடூரமாகத் தாக்கியது. தகவல் அறிந்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்தனா். அப்பகுதியில் இருந்தவா்கள், சகோதரா்கள் இருவரையும் மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், ஜஸ்வந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அஜீத்துக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். தாக்குதலில் ஈடுபட்ட 6 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 5 போ் கைது செய்யப்பட்டனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.